புதுடெல்லி: டெல்லி சராய் காலே கானில் இரும்பு கழிவுகளை பயன்படுத்தி கலைநயத்துடன் பிரமாணடமாக அமைக்கப்படும் டைனோசர் பூங்கா, வரும் 25ம் தேதி திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி சராய் காலே கானில் இரும்பு கழிவுகளை கொண்டு பொழுதுபோக்கு டைனோசர் பூங்காவை டெல்லி மாநகராட்சி அமைத்து வருகிறது. இந்த பூங்கா பொதுமக்களுக்கு திறக்க தற்போது தயாராகி வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
300 டன் இரும்பு கழிவுகளை பயன்படுத்தி பிரமாண்டமான டைனோசர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3.5 ஏக்கரில் ரூ.13.72 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பூங்காவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களிக்கலாம். பழைய இரும்பு பொருட்கள், கார்கள் உள்ளிட்ட
வாகனங்களின் உதிரி பாகங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, பூங்காவில் டைனோசர் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பார்ப்பதற்கு உண்மையான டைனோசர்களை கண்முன் நிறுத்தும் வகையில், மொத்தம் 15 வகையான டைனோசர் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்த டைனோசர்கள் கத்துவது, நடப்பது போன்ற இயக்கங்களுடன் மிரட்டல் தோரணை கொண்டதாகவும் உள்ளன. மேலும் பூங்காவிற்கு வருபவர்கள் இயற்கையை ரசிக்கும் வகையில் மரங்கள், செடிகள், புல் தரைகள் உள்ளிட்ட பசுமை பரப்பும் ஏற்பட்டுத்தப்பட்டு உள்ளன. இந்த பூங்காவின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இமமாதம் 25ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post டெல்லியில் இரும்பு கழிவுகளை பயன்படுத்தி கலைநயத்துடன் உருவான டைனோசர் பூங்கா 25ம் தேதி திறப்பு!! appeared first on Dinakaran.